Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பழமையான சத்திரத்தில் 14ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு

மே 31, 2022 11:06

ஒட்டன்சத்திரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா குளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆலம்பாளையம் பாலசுப்பிரமணியன் தோட்டத்தில் பழமையான சத்திரத்தில் 14ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.இப்பழமையான சத்திரம் குறித்து அப்பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மதுரை பாண்டிய நாடு ஆய்வு மையத்திற்கு தெரிவித்தார்.

மையத்தின் ஒட்டன்சத்திரம் அலுவலகத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் வீ.அரிஸ்டாட்டில், மூ.லட்சுமணமூர்த்தி ஆகியோர் சத்திரத்திரத்திலிருந்த 14ம் நுாற்றாண்டு கல்வெட்டுக்களை ஆய்வு செய்தனர்.பின் அவர்கள் கூறியதாவது: இந்த பழமையான சத்திரம் வழிப்போக்கர்கள் தங்க அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 துண்டுக்கல்வெட்டுகள் உள்ளன. இவை தொடர்பற்று காணப்படுகின்றன. சத்திரம் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட போது கல்வெட்டுகள் இடம் மாறி இருக்க வாய்ப்புள்ளது.

இதன் மறு கட்டமைப்பு காலம் 16ம் நுாற்றாண்டாக இருக்கலாம்.கல்வெட்டில் குறுநில மன்னன் கலிய அதியமான் பெயர் இடம் பெற்று உள்ளது. ராஜராஜேஸ்வரி என்ற நபர் கலிய அதியமானின் கீழ் கட்டுப்பட்டவர். இந்த சத்திரத்தை பாதுகாத்தார். பொறுப்பாளராக இருந்தார் என கல்வெட்டுகள் கூறுகின்றன.இச்சத்திரத்தில் வழிப்போக்கர்களுக்கு மூன்று நேரமும் உணவு வழங்கப்பட்டிருக்கிறது. வழிப்போக்கர்கள் மட்டுமல்லாது உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு இச்சத்திரம் செயல்பட்டது கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது என்றனர்.
 

தலைப்புச்செய்திகள்